செங்குன்றம்,
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும், 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை வக்கீல்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர். இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 31-ந் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்பேரில் 17 பேரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். சக கைதிகள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதற்காக இவ்வாறு அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் புழல் சிறையில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது. இதற்காக காலை 8.30 மணியளவில் எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் கலைபொன்னி மற்றும் ரோகித் துரை ஆகியோர் தனித்தனியாக காரில் புழல் சிறைக்கு வந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் தனி காரில் புழல் சிறைக்கு வந்தனர். காலை 10.30 மணிக்கு அவர்கள் சிறைக்குள் சென்றனர். பின்னர் மதியம் வரை அடையாள அணிவகுப்பு நடந்தது.
கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.