தமிழக செய்திகள்

18-ம் கால்வாய் கரை பகுதியில்ஆக்கிரமிப்பை அகற்றகோரி விவசாயிகள் மனு

கூடலூர் அருகே 18-ம் கால்வாய் கரை பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் பெரியகுளத்தில் உள்ள மஞ்சளாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூடலூர் அருகே கழுதை மேடு புலம் பகுதியில் 18-ம் கால்வாய் கரை வழியாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கால்வாய் கரையோரம் 1 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததுடன், விவசாயிகள் சென்று வந்த கரைபகுதியில் தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, விவசாயிகள் சென்று வர பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

SCROLL FOR NEXT