சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் போன்ற போலி இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்ட கேரள இளைஞர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலி இணையதளம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், போலி இணையதள பக்கத்தை முடக்கி, நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
போலி இணையதளம் மூலம் எத்தனை பேரிடம், எவ்வளவு ரூபாய் மோசடி செய்யப்பட்டது, மோசடி கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது, போலி இணையதளம் நடத்தி மோசடி செய்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் பாலு, உடந்தையாக இருந்த பிரசாந்த் ஆகியோர் கைதாகினர். 2 பேரையும் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தது.
போலி மெட்ரோ ரயில் நிறுவன இணையதள மோசடியில் கைதான கேரளாவின் ஸ்ரீஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் பெயரிலும் போலி இணையதளம் நடத்தி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.