தமிழக செய்திகள்

2015ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் ஒரேநாளில் 23 செ.மீ. மழைப்பதிவு

2015ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் ஒரேநாளில் 23 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

சென்னை,

சென்னையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. நேரம் செல்லசெல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு கனமழை பெய்தது. நள்ளிரவு அதி கனமழை பெய்ய ஆரம்பித்தது. இன்று காலையிலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கின.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 12 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 23 செ.மீட்டர் கனமழை கொட்டித்தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக டி.ஜி.பி. அலுவலகப் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் 21 செ.மீட்டர், அயனாவரத்தில் 18 செ.மீட்டர், எம்.ஜி.ஆர். நகரில் 17 செ.மீட்டர், அண்ணாநகரில் 16 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் அதி கனமழை எனக் கணக்கீடப்படும். அதன்படி சென்னையில் அதி கனமழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் அதி கனமழை பெய்துள்ளது.