சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா நிவாரணா நிதியின் 2வது தவணை ஜூன் 3ல் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார். 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன் 3 ஆம் தேதி துவங்கிவைக்கவுள்ளார். மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.