மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு சுந்தர் மற்றும் போலீசார் பொறையாறு அருகே காட்டுச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து ஆயப்பாடி வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. ஒரு பெட்டிக்கு 48 மதுபாட்டில்கள் வீதம் 14 பெட்டிகளில் 672 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
3 பேர் கைது
அதன்பேரில், அந்த காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சீர்காழி அருகே உள்ள கூழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த கனியப்பன் (32), வினோத்குமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 672 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கூழையாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.