தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகேவாலிபரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது

விழுப்புரம் அருகே வாலிபரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டாச்சிபுரம் தாலுகா சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகன் மயிலவன் (வயது 34). இவரும் அவரது மாமா ரகோத்தமன் என்பவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மீண்டும் சு.பில்ராம்பட்டுக்கு திரும்பினர். விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது அவர்கள் இருவரும் சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த 3 பேர், மயிலவனை மிரட்டி அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து மயிலவன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச்சென்றதாக மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்த தேவா (21), ஜீவா (23), விக்னேஷ் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.