தமிழக செய்திகள்

ரூ.31½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் சம்பவம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.

தங்கம் பறிமுதல்

இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.

இதில் அவர் தகடு வடிவில் தங்கத்தை செல்போனில் மறைத்து வைத்தும், சங்கிலி வடிவில் எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வந்த 67 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.31 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். மேலும் தங்கம் கடத்தி வந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.