தமிழக செய்திகள்

தனியாருக்கு சொந்தமான ஓட்டலில் ரூ.4 லட்சம் கொள்ளை

கரூர்-கோவை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலின் புகைப்போக்கி துவாரத்தின் வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள் கல்லா பெட்டியில் வைத்திருந்த 4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கரூர்

தனியார் ஓட்டல்

கரூர்-கோவை ரோட்டில் ரெட்டிபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. இதில் ராயனூரை சேர்ந்த ராஜா (வயது 37) என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊழியர்கள் ஓட்டலை பூட்டி விட்டு சென்றனர்.

ரூ.4 லட்சம் கொள்ளை

நேற்று காலை வழக்கம்போல் ராஜா ஓட்டலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டலில் உள்ள புகைபோக்கி மின்விசிறியை மர்ம ஆசாமிகள் அகற்றி அதன்மூலம் துவாரத்தின் வழியாக ஓட்டலில் குதித்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.