தமிழக செய்திகள்

காருக்குள் தீவைத்து தற்கொலை... தாயை கட்டி அணைத்தபடி இருந்த குழந்தைகள் - நெஞ்சை உலுக்கிய சம்பவம்

கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைகுளம் கிராமத்தில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காரை பார்வையிட்டபோது முன் இருக்கையில் ஒருவரும், பின் இருக்கையில் 3 பேரும் எலும்புக்கூடுகளாக கிடந்தனர். 4 பேரின் உடல்களையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த 4 பேர் யார்? அவர்கள் காருடன் சேர்த்து கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதுதவிர கார் என்ஜின் நம்பர்களை வைத்து விசாரணையிலும் இறங்கினர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, சென்னை நந்தம்பாக்கம் பெரியார்நகர் பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ரபி. கார் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நஸ்ரின் பாத்திமா. இவர்களுக்கு அப்ரின் பாத்திமா (15 வயது) என்ற மகளும், முகம்மது காஜா (13 வயது) என்ற மகனும் உண்டு. முகம்மது ரபிக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை சில மாதங்களுக்கு முன் விற்றதாகவும் கூறப்படுகிறது.

எனினும் கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் திணறிய முகம்மது ரபி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 13-ந்தேதி சென்னையில் இருந்து தனது மனைவி, குழந்தைகளுடன் ஒரு காரில் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர்கள் 4 பேரும் காரில் புறப்பட்டு பெட்டைகுளம் கிராமத்தில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு காரில் இருந்தபடி கதவுகளை லாக் செய்துவிட்டு, ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தனது மீதும், மனைவி, குழந்தைகள் மீதும் முகம்மது ரபி ஊற்றி தீவைத்துள்ளார்.

Also read:சுட்டெரிக்கும் வெயில்: சென்னையில் வாகன ஓட்டிகள் வசதிக்காக சிக்னல்களில் 40 இடங்களில் பசுமை பந்தல்

இதில் காருடன் எரிந்து உடல் கருகி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரவு முழுவதும் தீ எரிந்ததால், அவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை திறந்து அவர்களை மீட்கும்போது, காரின் பின் இருக்கையில் குழந்தைகளான அப்ரின் பாத்திமா, முகம்மது காஜா ஆகியோர் தங்களது தாயார் நஸ்ரின் பாத்திமாவை கட்டி அணைத்தபடி எலும்புக்கூடுகளாக இருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கண் கலங்கினர். கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.