ராமேசுவரம்
ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு செல்ல முயன்றதாக இலங்கை வல்வெட்டி துறை பகுதியைச் சேர்ந்த ஜனகன்(37) என்பவரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மண்டபத்தில் உள்ள கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜனகனிடம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உள்ளிட்ட கடலோர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதுடன் அவரது செல்போன் இருந்த எண்களை வைத்தும் அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஜனகனை பாம்பன் முந்தல்முனை பகுதியில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச்சென்று தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதியில் இறக்கி விட்டு வந்த ராமேசுவரம் மருதுபாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த அனந்தபாலன்(40), ஜெகதீஷ்(37), அர்தினாஸ்(38), புது ரோடு பகுதியைச் சேர்ந்த சச்சின்(24) ஆகிய 4 பேரையும் கடலோர போலீசார் கைது செய்தனர். இந்த 4 பேர் மீதும் கள்ளத்தனமாக இலங்கை நபரை படகில் ஏற்றிச் சென்றதாக கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.