சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என தெரிகிறது.
மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த த.வெ.க.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுபோட முடியாது. எனவே, த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், த.வெ.க.வுக்கு 4 வழிகள் இருக்கின்றன.
முதல் வழியாக, த.வெ.க.வுக்கு காங்கிரஸ் (5 தொகுதிகள்), பா.ம.க. (5), இந்திய கம்யூனிஸ்டு அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அல்லது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளில் ஒன்று (2) ஆதரவு அளிக்க வேண்டும்.
2-வது வழியாக, த.வெ.க.வுக்கு பா.ம.க. (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1) ஆதரவு அளிக்க வேண்டும்.
3-வது வழியாக, த.வெ.க.வுக்கு காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1) ஆதரவு அளிக்க வேண்டும்.
4-வது வழியாக, த.வெ.க.வுக்கு அ.தி.மு.க. (45) ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், துணை முதல்-அமைச்சர், முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளை குறிவைக்கும். இவ்வாறு 4 வழிகள் இருந்தாலும், த.வெ.க. தலைவர் விஜய் எடுக்கப்போவது தான் இறுதி முடிவாக இருக்கும்.