பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வக்கீல் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25-ந் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28-ந் தேதிக்குள் கவர்னர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து 4 நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை, அதற்கான காரணத்தையும் கவர்னர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும்,
அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.