சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாக பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்க வேண்டும். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் முன்னெடுக்கும் தொடர்விடுப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழுமையான ஆதரவினைத் தெரிவிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும் வரை தோள்கொடுத்து துணைநிற்போம் என்றும் உறுதியளிக்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.