சென்னை,
கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை நடந்தது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்தனர். அந்த வகையில் கடந்த 1 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 9,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ரூ.30 கோடி மதிப்புள்ள கஞ்சா, ஹெராயின், குட்கா போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 1,272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,221 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலுக்கு பயன்பட்ட 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரபல கஞ்சா வியாபாரி மங்கராஜ், அவரின் கூட்டாளிகள் லட்சுமி, சரண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா கடத்திய வழக்கில் 7,708 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.