தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு புரட்சித் தமிழர் கட்சி மாநில தலைவர் அருந்தமிழரசு தலைமை தாங்கினார். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த மக்கள் கூறும்போது, 'எங்கள் ஊரில் நிலம் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை மக்கள் தடுக்க முயன்றனர். அந்த மக்கள் மீது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இறந்தவர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. இந்த வழக்கை ரத்து செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்றனர். போலீசாரின் பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்த அவர்கள், கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். மனு கொடுத்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.