திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.எம் நகர் கஜலட்சுமி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவர் திருவள்ளூர் திரு.வி.க பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சிக் கடையில் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவள்ளூர் டவுன் ரோந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பஸ் நிலையம் அருகே வந்த போது தியாகராஜனின் கடை தீ படித்து எரிந்ததை கண்டனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பை நிலையத்திற்கும், தியாகராஜனுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வின்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினார்கள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தியாகராஜன் அதிகளவிலான உணவுப் பொருட்களை வாங்கி வைத்துள்ளார். தீ விபத்தில் நேற்று கடையில் வசூலான ரூ.35 ஆயிரம், பிரிட்ஜ் மற்றும் இனிப்புகள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா. இதில் மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பபட்டது.