தட்டார்மடம்:
நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் சின்னத் துரை. இவரது மனைவி அமுதா (வயது 36). இவர்களுக்கு சொந்தமான தோட்டம், சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு விலக்கு வடலிவிளை பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சடையன்கிணறு ஆண்டி மகன் மந்திரம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கண்காணிப்பு கேமரா சேதப் படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சின்னத்துரை, அவரது உறவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மந்திரம் தரப்பினர், அமுதாவை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையன்கிணறில் சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதில் அங்குள்ள ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 4 மரங்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்த புகாரின்பேரில் சடையன்கிணறு ஆண்டி மகன் மந்திரம், மந்திரம் மகன் சுதாகர், அதே பகுதிய சேர்ந்த சிதம்பரம், செல்லத்துரை மகன் முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீதும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.