தமிழக செய்திகள்

திருமங்கலம் அருகே சாலையில் வீசிய ஆண் சிசு சாவு- சிகிச்சை அளித்தும் இறந்த பரிதாபம்

திருமங்கலம் அருகே சாலையில் வீசிய ஆண் சிசுவுக்கு சிகிச்சை அளித்தும் இறந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே பொட்டல்பட்டி கிராமம் உள்ளது. இங்கு மேல்நிலைத்தொட்டி அருகே உள்ள சாலையில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவை யாரோ பையில் சுற்றி வீசி சென்றுள்ளனர். சிசுவின் அழு குரல் கேட்ட பொட்டல்பட்டி கிராமமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முகமது தைப்புக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து சென்று சிசுவை மீட்டு கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆண் சிசு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இந்த சிசு உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.