விருதுநகர் புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி விலக்கில் விபத்துகளை தவிர்க்க சேவை ரோடு அமைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வடமலைகுறிச்சி வழக்கில் சேவை ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக குழாய்கள் பதித்து தற்காலிகமாக சேவை ரோடு அமைக்கப்படும். அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் தற்காலிகமாக கிராவல் மண் மூலம் அமைக்கப்பட்ட சேவை ரோடு சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதி இல்லாமல் போய்விட்டது. தெரு விளக்குகளும் அமைக்கப்படவில்லை. விபத்துகள் ஏற்படும் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்தபடி உடனடியாக சேவை ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் வலியுறுத்தியுள்ளார்.