தமிழக செய்திகள்

தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி சாலை தடுப்பு மீது மோதி விபத்து

ஓசூரில் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி சாலையின் தடுப்பு கம்பிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர்

ஓசூரில் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி சாலையின் தடுப்பு கம்பிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தறிகெட்டு ஓடிய லாரி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி நேற்று ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த தசரதன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தர்கா அருகே லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடையே இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கலையரசன் (34), லாரி டிரைவர் தசரதன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் லாரி டிரைவர் தசரதனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தும் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து லாரி மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

டிப்பர் லாரி தறிகெட்டு ஓடி கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.