தமிழக செய்திகள்

பூங்கா ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற இளம்பெண் சாவு

பூங்கா ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மகள் அமுதா (வயது 21). இவர், தனது குடும்பத்தினருடன் சென்னை சூளையில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்புக்காக வந்தார். காஞ்சீபுரத்தில் இறங்கிய அனைவரும் அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் பூங்கா ரெயில் நிலையத்துக்கு வந்தனர். 1-வது நடைமேடையில் ரெயில் நின்றபோது, குடும்பத்தினர் அனைவரும் ரெயிலின் இடதுபுறம் உள்ள நடைமேடையில் இறங்கிவிட, அமுதா ரெயிலின் வலதுபுறம் உள்ள மற்றொரு நடைமேடையில் இறங்கினார். நடைமேடையில் அமுதா இல்லாததை கண்டு அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அப்போது மறுபுறத்தில் நின்று கொண்டிருந்த அமுதா, மீண்டும் ரெயிலில் ஏறி இடதுபுறம் உள்ள நடைமேடைக்கு வந்தார். அதற்குள் ரெயில் புறப்பட்டுவிட்டது. ஓடும் ரெயிலில் இருந்து அமுதா, கீழே நடைமேடையில் குதித்தார். இதில் அமுதா கால் இடறி பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அமுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT