கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது வாலிபர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், தனியார் பள்ளியில் முதல்வராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து பெற்று சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் 'இன்ஸ்டாகிராம்' மூலம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற வாலிபர், இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது ஹரி கிருஷ்ணன், தான் கட்டிடத் தொழில் செய்து வருவதாக கூறினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியின் மதிய இடைவேளையில் இருவரும் பள்ளியின் அருகே சந்தித்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஹரி கிருஷ்ணன் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அவரை எச்சரித்து விட்டு காரில் இருந்து இறங்கி பள்ளிக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து வெளிநாட்டில் வசித்து வரும் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

அதற்கு அவர், ஹரி கிருஷ்ணன் உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி கூறினார். அதன்படி அந்த பெண், ஹரி கிருஷ்ணனிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்.

Also read:நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் சாதி பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு - அண்ணாமலை கண்டனம்

அப்போது தன்னிடம் பேசவில்லை என்றால், காரில் இருவரும் தனியாக இருந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் அந்த பெண்ணை ஹரி கிருஷ்ணன் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மீண்டும் ஹரி கிருஷ்ணனிடம் பேசி வந்தார். இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்து அந்த பெண்ணின் கணவர் சென்னை வர இருப்பதாகவும், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இதையறிந்த ஹரி கிருஷ்ணன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். என்னிடம் பேசிவிட்டு, உன் கணவருடன் சேர்ந்து வாழப்போகிறாயா? எனக்கேட்டு இளம்பெண்ணை தாக்கி, கழுத்தை பிடித்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.