நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே அக்காள் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார்சைக்கிள் மீது லாரி மாதி எலக்ட்ரீசியன் பலியானார். லாரி டிரவர் கைது செய்யப்பட்டார்.
எலக்ட்ரீசியன்
நாமக்கல் காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மூத்த மகன் விஜயகுமார் (வயது 28). எலக்ட்ரீசியன். 2-வது மகன் மணிவண்ணன் (25). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் அண்ணன், தம்பி 2 பேரும் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நாமக்கல் செல்வதற்காக பேளுக்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டர்சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். மணிவண்ணன் பின்னால் அமர்ந்திருந்தார்.
அப்போது நாமகிரிப்பேட்டை அருகே பச்சுடையாம்பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த டெம்போ லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மேதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மணிவண்ணன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
தனது கண் எதிரே அண்ணன் இறந்ததை கண்டு மணிவண்ணன் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் பலியான விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பேளுக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார் (38) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்காள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பியபோது தனது தம்பியின் கண் எதிரே எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் நாமக்கல் காந்தி நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.