மேலூர்,
விபரீத விபத்தால் தனது லாரிக்கே அதன் உரிமையாளரான வாலிபர் உயிரை கொடுக்க நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விபரீத விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வையாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). இவருக்கு சொந்தமான லாரியில் சென்னையில் இருந்து ரசாயன மருந்துகளை ஏற்றிக்கொண்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு ஓட்டிவந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள மலை அடிவார பகுதியில் நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த லாரி வந்தது. அப்போது அந்த லாரி திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தை நோக்கி சென்றது.
இதையடுத்து உயிர் தப்பிக்க அந்த நேரத்தில் சக்திவேல், தனது லாரியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவர் அணிந்து இருந்த சட்டை லாரியின் பக்கவாட்டில் இருந்த இரும்பு கொக்கியில் சிக்கி சக்திவேல் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இந்த விபரீத விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் விரைந்து வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு சொந்தமான லாரியை ஓட்டிவந்து, விபத்தில் சிக்கி அதன் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.