தஞ்சாவூர்,
தஞ்சாவூர் அருகே ராவுசாப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜகவில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகள் அவரவர் கருத்துக்களைக் கூறுவர். அதிமுகவை பொருத்தவரை முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநரிடம் திமுகவினர் ஊழல் பட்டியல் கொடுத்தது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, கருணாநிதி மீது எம்.ஜி.ஆர். புகார் கொடுத்தார். அப்போது இதுதொடர்பாக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் யார் மீதும் ஊழல் புகார் அளிக்கலாம். இறுதியில் என்ன நடப்பது என்பது தீர்ப்பு வரும் போதுதான் தெரியும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.