நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவில் திருவிழாக்கள்
நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம் உள்ளதால் திருவிழாவின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் மாதங்கள் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும் காலங்கள் என்பதால், நிகழ்ச்சிகளின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதால், ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் கோவில் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த கடும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் ஆபாசமாக உடைகள் அணியக்கூடாது.
கலைநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு
ஆபாசமாக ஆடக்கூடாது. இந்த கலை நிகழ்ச்சி பொதுவான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தலைவர், மதம் மற்றும் சாதியை குறித்து இழிவாக பேசவோ அல்லது பாடவோ, ஆடவோ கூடாது.
நிகழ்ச்சி நடத்துவதற்கு 10 பேர் கொண்ட விழாக்குழுவினர் நியமிக்கப்பட்டு, அவர்கள் குறித்த பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை உள்ளூர் போலீஸ் நிலைய அதிகாரியிடம் நிகழ்ச்சி நடப்பதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
எனவே ஐகோர்ட்டு வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதை இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.