சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாக முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வெளிமாநில, வெளியூர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுலா பயணிகள் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தவிர பிற நாட்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து அதில், கொரானா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருப்பவர்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவர்.
ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இருப்பிட விலாசத்திற்காக ஆதார் அல்லது குடும்ப அட்டை , ஸ்மார்ட் கார்டில் ஏதாவது ஒன்றினை காட்டினால் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் அதிக அளவில் கூடும் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கும் தடை விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.