தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: சிவகங்கையில் இன்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் தொண்டர்கள் திரண்டு வருமாறு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அழைப்பு

சிவகங்கையில் இன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் திரண்டு வருமாறு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கையில் இன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் திரண்டு வருமாறு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

இது தொடர்பாக அ.தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சிவகங்கை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று(சனிக்கிழமை) சிவகங்கையில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி அளவில், அங்கு மதுரை பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

எனவே சிவகங்கை மாவட்டம் வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மாலை அணிவித்து வரவேற்பு

முன்னதாக இன்று மாலை 3 மணி அளவில் அவர் எஸ்.புதூர் ஒன்றியம் குன்னத்தூரில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு மணமக்களை அவர் வாழ்த்துகிறார்.

மாலை 4 மணியளவில் திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மாலை 5 மணி அளவில் சிவகங்கை நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மற்றும் வேலு நாச்சியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மாலை 6 மணி அளவில் சிவகங்கை புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். எனவே சிவகங்கைக்கு வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வருமாறு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.