தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியில் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை அருகில் உள்ள டீக்கடையின் பின்புறத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் ராஜமாணிக்கத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.