தமிழக செய்திகள்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். #BusFareHike #UdhayanidhiStalin

சென்னை,

தமிழக அரசு கடந்த 19ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின்

கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்கவரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர்சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது.

பஸ் கட்டண உயர்வு முன்னறிவிப்பு இன்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. சார்பில் மாவட்ட தலை நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன முழக்கமிட்டார். மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடுகின்றனர். சட்டமன்றத்தை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிக்க திணறும் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபிக்கு எதிராக தீர்ப்பு வரும். ஈவு இரக்கமின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பஸ் டிக்கெட்டுகளை அச்சுடுவதில் கூட ஊழல் நடந்துள்ளது. கடந்த காலங்களில் டீசல் விலை குறைவாக இருந்த போது வசூல் ஆன பணம் எங்கே? என கூறினார்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி எம்.பி. பேசினார்கள். கனிமொழி பேசும் போது மக்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்ப்பதில்லை. பாஜகவின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது, தமிழகத்திலிருந்து பாஜக விரட்டப்பட வேண்டும் என கூறினார்.

தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கண்டன முழக்கமிட்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் பார்க்கலாம். மேடையில் இருப்பதை விட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன்.

#Protest #BusFareHike #UdhayanidhiStalin #DMK #Kanimozhi #MKStalin

SCROLL FOR NEXT