சென்னை,
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம். வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் சந்தேகங்கள் பகுதி வாரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளுடன் சேர்ந்து மாநில அரசு அவர்களது தேவைகளை ஆய்வுசெய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி', என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,வேளாண் சட்டங்களில் எந்த விஷயம் விவசாயிகளை வருந்தச் செய்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதேவேளை விவசாயிகள் போராட்டம் முடிவில்லாமல் செல்வதால் அரசாங்கமும் சரிவர இயங்க முடியவில்லை. வேளாண் சட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பரிந்துரையாக அளிக்கலாம். மேலும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு விவரிக்க வேண்டும். மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தங்களை செய்து அமல்படுத்திக் கொள்ளலாம். அதுவே நாடு முன்னோக்கி செல்வதற்கான வழியாக நான் பார்க்கிறேன், என்று பேசியுள்ளார்.
மேற்கண்ட தகவல் ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.