தமிழக செய்திகள்

தியாகராயநகர் பூங்காவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாவை வார்த்தைகளால் வறுத்த பொதுமக்கள்

தியாகராயநகர் பூங்காவில் பரபரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாவை வார்த்தைகளால் வறுத்த பொதுமக்கள்



சென்னை,

தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யநாராயணன். சசிகலா அணி ஆதரவாளராக இருந்து வருகிறார். கூவத்தூர் கோல்டன் பே ரிசாட்டில் தங்கியிருந்தபோது நடைபயிற்சி உடையில் வெளியே வந்து, எங்களை யாரும் கடத்த வில்லை. விடுதியில் தங்கி யிருக்கிறோம். நல்லாத் தான் இருக்கிறாம். தினமும் மட்டன் போட்டு மட்டையாக்குகிறார்கள் என்று ஏக தாளத்துடன் கூறினார்.

சென்னைக்கு வந்த பிறகு பொதுமக்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறார். நேற்று ஜீவா பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு சென்றார். வழக்கமாக அந்த பூங்கா வுக்குத்தான் நடை பயிற்சி செல்வார். இதுவரை அவரை பார்த்ததும் சிரித்தபடி செல்லும் பொதுமக்கள் நேற்று சிரிக்கவில்லை. மாறாக அவர்களின் முகங்களில் கோபக் கனல்தான் தெரிந்தது.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சொகுசு விடுதியில் தங்கியது, சசிகலா தரப்புக்கு ஆதரவாக சென்றது பற்றி வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த சத்யா பொதுமக்களை எவ்வளவோ சமரசப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் கூட்டமும் அதிகரித்தது.

பொதுமக்களிடம் சிக்கி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சில நிமிடங்கள் தவித்தார். பொதுமக்கள் மிகவும் சூடானதால் நடைபயிற்சியை தொடர முடியாமல் அங்கிருந்து வெளியேறினார்.விளக்கம் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் சத்யா தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் சசிகலாவின் தண்டனையை மட்டுமே பார்க்கிறார்கள். அது வேறு. ஆட்சி வேறு. இது அம்மாவின் ஆட்சி. அம்மா ஆடசி கலைவதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த நேரத்தில் கட்சி பிளவால் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது தேர்தல் வருவதையோ விரும்பவில்லை. யார் முதல்வர் என்பதை பார்க்க கூடாது. அம்மாவின் ஆட்சி பதவியில் நீடிக்க வேண்டும்.

நான் எனது பணியை தொய்வில்லாமல் தொகுதி மக்களுக்கு செய்வேன். நான் பணி செய்யாவிட்டால் மக்கள் என்னிடம் கேள்வி கேட்கட்டும். சிலரது எதிர்ப்பால் பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு செல்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் நடைபயிற்சி செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.