தமிழக செய்திகள்

அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் பேசினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-

குறுகிய எண்ணம் கொண்ட கட்சி திமுக தான். அதிமுக பரந்த எண்ணம் கொண்ட கட்சி. சிலர் மதத்தின் அடிப்படையிலும் ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகள் பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். ஜாதி, மத ரீதியில் சிலர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அதிமுக பொறுத்தவரை மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அல்ல. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதாவின் ஆட்சியிலும் சரி. ஆண் ஜாதி பெண் ஜாதி மட்டும் தான். ஜாதி பார்க்கும் கட்சியும் அதிமுக கிடையாது. அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கும். அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து பயணிக்கும்.

தொடர்ந்து, தமிழகத்தில் அமைதிப் பூங்கா நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT