சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள், தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பா.ஜ.க. சார்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் நடிகை நக்மா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை, திரைப்படங்களில் இணைந்து நடித்த தருணங்கள், அரசியல் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த நக்மா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என்றார்.
நானும், ரஜினிகாந்தும் நீண்ட கால நண்பர்கள். படங்களில் இணைந்து நடித்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே நாங்கள் இயல்பாக சந்தித்து பேசிக்கொண்டோம். இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்த திட்டமும் இல்லை. மேலும் எங்களுடைய இந்த சந்திப்பு அரசியலுக்கானது அல்ல. அவர் தற்போதைய சூழலில் அரசியலுக்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். சிறப்பாகவும் செயல்படுவார். இருந்தாலும் அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு எடுக்கவேண்டும்.
இது அவருடைய சொந்த விருப்பம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஏராளமானோர் எதிர்பார்க்கின்றனர். நானும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கருதுகிறேன் என்று பேசிஉள்ளார் நக்மா.