சென்னை,
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் இன்று ஆய்வு செய்தனர்.அப்போது மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.
பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் பற்றி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் பேட்டி அளித்தனர். ககன் தீப் சிங் பேடி கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது போன்று தொடர்ச்சியாக தடுப்பூசி போட்டு வந்தால், 20 நாட்களில் மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை போட்டுவிட முடியும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்தோம். அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் வசதி இருக்கிறது. இருப்பினும் கழிவறை வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கூடுதலான வசதிகளை விரைவில் மேற்கொள்ள உள்ளோம்.
கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் மார்க்கெட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் இனி கண்காணிப்பார்கள். கூட்ட நெரிசலை குறைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறியதாக மே மாதம் மட்டும் ரூ.1.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் சுற்றிய 11 ஆயிரம் பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 700 பேருக்கும் அபராதம் விதித்துள்ளோம். மார்க்கெட்டில் நோய் பரவலை தடுக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளனர் இவ்வாறு ககன் தீப் சிங் கூறினார்.