தமிழக செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் 1977-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை வணிகவியல் படித்த முன்னாள் மாணவர்கள் 35 பேர்  43 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன் தொடக்கமாக ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் தாங்கள் படித்த கல்லூரி முன்பு அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் ஆனந்த ராமகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் கல்லூரி வகுப்பறையை சுற்றிப்பார்த்தனர்.

தொடர்ந்து கல்லூரி நூலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அனைவரையும் கணேசன், சுப்பிரமணியன், தங்கராஜ், பெரியசாமி, முத்துக்குமார், முருகையா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.