சென்னை புளியந்தோப்பு, நரசிம்மன் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலம், 72-வது வார்டில் மலேரியா பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு வந்த முனுசாமி புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் வ.உ.சி நகர் சந்திப்பில் உள்ள 72-வது வார்டு உதவி என்ஜினீயர் அலுவலகத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக 13-வது நீதிமன்ற நடுவர் சக்திவேலிடம் முனுசாமி அளித்த வாக்குமூலத்தில், "72-வது வார்டு உதவி என்ஜினீயர் தினேஷ் தன்னை பழிவாங்கும் நோக்கில் வேலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். வழக்கமாக தான் செய்து வந்த சுகாதாரத் துறையில் தனக்கு பணி கேட்டபோது தினேஷ் வேலைக்கு சேர்க்காமல் தவிர்த்து வந்ததால் மன உளைச்சலில் தீக்குளித்தேன். தினேஷ் மற்றும் சுகாதார அலுவலர் தங்கராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகாதார அலுவலர் தங்கராஜ் மற்றும் உதவி என்ஜினீயர் தினேஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.