தமிழக செய்திகள்

மொய்விருந்தில் வசூலான ரூ.4 கோடியை கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயர் கைது

மொய்விருந்தில் வசூலான ரூ.4 கோடியை கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயர் கைது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் மொய் விருந்தில் வசூலான ரூ.4 கோடியை கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.4 கோடி மொய்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50), விவசாயியான இவர் பிளக்ஸ் பிரிண்டிங் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 25-ந் தேதி ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியுடன் விருந்து கொடுத்து ரூ.4 கோடி வரை மொய் வசூல் செய்தார். இந்த பணத்தை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டிலேயே வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வெளியே வந்த போது ஒரு நபர் அவரை நோக்கி வந்ததால் பதற்றமாகி வீட்டிற்குள் ஓடி கதவை சாத்தி கொண்டு ஜன்னல் வழியாக சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். ஆனால் யாரையும் காணவில்லை. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் பலரும் அங்கு குவிய தொடங்கினர்.

கைது

சுமார் 2 மணிநேரம் வரை உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அந்த பகுதியில் தேடினார்கள். இந்த நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள சோளத்தோட்டத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.

அணவயல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவநேசன் (24) என்றும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் பணம் கட்டி ஏமாந்தவர் என்றும், அந்த கடனை அடைக்க மொய் விருந்து பணத்தை திருட முயன்றதாகவும் கூறியுள்ளார். பின்னர் சிவநேசனை, வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிவநேசனுடன் வேறு யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.