ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருக்கல்யாண விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருக்கல்யாணத்தின்போது ஆண்டாளுக்கு அணிவிக்க திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரம் கொண்டு வரப்படுவது வழக்கம். இ்ந்த ஆண்டு விழாவுக்காக திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் நேற்று காலை வந்தது. அதற்கு ஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகையில் வரவேற்பு அளித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.