சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், முனுசாமி, செம்மலை, மைத் ரேயன் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்க மணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், துரைக் கண்ணு, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரைமுருகன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.