தமிழக செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.18 லட்சம் பறிமுதல்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனயில் கணக்கில் வராத 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மின்வாரியம், பத்திரப்பதிவு, டாஸ்மாக், காவல்நிலையம் உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 18 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சோதனையின் போது 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள், 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஆண்டு தீபாவளி காலகட்டத்தில் 54 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது 4 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT