இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இ-சேவை மையம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்கி நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைக்க உதவுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலேயே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கணினி, பிரிண்டர், ஸ்கேனர், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும். குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.23 முதல் திறக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பத்தை சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3,000, நகர்ப்புற பகுதியில் அமைக்க ரூ.6,000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.