கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்க ஒப்புதல் - எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவை அதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள பிரதமருக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு "சர்வதேச விமான நிலையம்" அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முடிவை அதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் கலாசார மையமாகவும், தென் தமிழகத்திற்கான முக்கிய இணைப்பாக விளங்கும் மதுரை மண்ணின் மக்கள் விடுத்த நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Also read:கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.