தமிழக செய்திகள்

பிரதமரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்க: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பிரதமரின் உருவப்படத்தை இழிவுபடுத்தியோரை திமுக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நவீன், பாரதப் பிரதமரின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டிருப்பதும், அவர்களைக் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

நாட்டை வழிநடத்திச் செல்லும் பிரதமர், தமிழகத்திற்கு வந்திருக்கும் வேளையில், அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் விதமாகவும், அவரை இழிவுபடுத்தும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் வேளையில், அதைக் கண்டுகொள்ளாத அளவிற்கு, திமுக அரசின் கண்ணை அரசியல் காழ்ப்புணர்ச்சி மறைத்துவிட்டதா?

₹4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழகத்திற்குப் பிரதமர் அவரகள் வழங்கியதற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, அடிப்படை சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா?

உண்மையில், இதுபோன்றதொரு செயலில் ஈடுபட்ட காங்கிரஸைக் காட்டிலும், அதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியம் பெரும் கண்டனத்திற்குரியது. அரசியல் கணக்குகளைத் தாண்டி, தான் வகிக்கும் பொறுப்பினை உணர்ந்து, பிரதமரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை திமுக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.