தஞ்சாவூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம். சம்பவம் நடந்த இரவு, ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்திய சீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டநிலையில் மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்ற நீதிபதி பாரதி முன் சரணடைந்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தநிலையில் சிவகாசி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று மாலை அவர் சரணடைந்தார்