தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

கொலை முயற்சி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம் ஆதரவாளர்கள் ரகளையால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கல்யாணஓடை கிராமத்தை சேர்ந்தவர் துரை.செந்தில்(வயது 56). மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்.

கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் துரை.செந்திலை மதுக்கூர் போலீசார் கைது செய்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். இதுபற்றி அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு, அவரை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டும், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தவும் செய்தனர். போலீஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதன் காரணமாக போலீஸ் நிலைய பகுதியில் ஒரே களேபரமாக காட்சி அளித்தது. ஆதரவாளர்களின் இந்த ரகளைக்கு மத்தியில் துரை.செந்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து சாதுர்யமாக தப்பி சென்றுவிட்டார். ரகளை, கூச்சல், குழப்பங்கள் முடிந்து சூழல் அமைதியான பின்னரே போலீஸ் நிலையத்தில் இருந்து துரை.செந்தில் தப்பி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் துரை.செந்தில் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 15 பேரை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT