தமிழக செய்திகள்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்

திண்டுக்கல்லில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதனை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

கலை திருவிழா

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் போட்டி தொடக்க விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் கலை திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், 'கலையரசன், கலையரசி' என்ற பெயரில் விருதுகளும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மாநில அளவில் சிறப்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்திய 25 பேர் சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி சிவஹரிதாவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரத்து 571 பேர்

இந்த கலைத்திருவிழாவில் பள்ளி அளவில் கிராமிய நடனம், நவீன ஓவியம், காய்கறிகள், பழங்கள் மூலம் கலை பொருட்களை உருவாக்குதல், களிமண் மூலம் சிலைகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 61 ஆயிரத்து 557 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடந்தது. அதில் 16 ஆயிரத்து 732 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வட்டார அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 188 வகையான போட்டிகளில் 5 ஆயிரத்து 571 பேர் பங்கேற்றனர்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து