பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இதற்கிடையே கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனை தொடர்ந்து முன்புற கதவு அடைக்கப்பட்டது. நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்து சீராக வருவதாக தெரிகிறது. இதனால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.