சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் பல்வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாடசாலை தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டு நலத்திட்டப் பணி மாணவர்கள் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்தல் நாள் குறித்த ரங்கோலி கோலமிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மனித சங்கிலி மூலம் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
இதைப் போன்று அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் பல்வகையான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.